கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில், வங்கிசேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை அபராதமாக வங்கிகள் வசூலித்துள்ள விவரம் தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாகப் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 433 கோடி அபராதமாக வசூலித்துள்ளது. ஒட்டுமொத்த அபராதத்தொகையில் பாதித் தொகையை எஸ்பிஐ வங்கி வசூலித்துள்ளன.

30சதவீத அபராதத் தொகையை ஆக்சிஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் வசூலித்துள்ளன.

குறைந்த இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்காமல் நீண்டகாலம் இருந்த நிலையில், கடந்த ஆண்டு இதை எஸ்பிஐ வங்கி மீண்டும் அறிமுகம் செய்தது. அப்போது, குறைந்தபட்ச இருப்பு தொகையை முன்பு இருந்ததைக் காட்டிலும் இரு மடங்கு உயர்த்தியது.

ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையைக்குறைத்தது.

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கிற்கான குறைதபட்ச இருப்பு தொகையை 5000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகக் குறைத்தது. ஓய்வூதியதாரர்கள், மைனர்களின் கணக்குகளுக்கு குறைந்த பட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்று மாற்றி அமைத்தது. கிராமப்புற வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் இருப்பு தொகையாக ரூ.1000 வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அபராத முறை அறிமுகப்படுத்தப்பட்டு 8 மாதங்களில் அதாவது 2017-18 ஏப்ரல் முதல் 2018- ஜனவரி மாதம் வரை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து, ரூ.1,700 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், எச்டிஎப்சி வங்கி ரூ.590 கோடி, ஆக்சிஸ் வங்கி ரூ.530 கோடி, ஐசிஐசிஐ வங்கி ரூ.317 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.211 கோடி என வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக வசூலித்துள்ளன.

இதில் எஸ்பிஐ வங்கி விதிக்கும் அபராத விகிதத்தைக் காட்டிலும், தனியார் வங்கிகளான எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கிகள் விதிக்கும்அபராதத்தின் அளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு நிதித்துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்தார்.

-நன்றி ஹிந்து

 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *