சென்னையில் ஃபேஸ்புக் மூலம் பழகி பல பெண்களை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த தளத்தில் செல்போன், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை ஏராளமானோர் விரும்பி பயன்படுத்துகின்றனர். ஒருவரை ஒருவர் சங்கிலித் தொடர் போல் இணைக்கும் வசதி ஃபேஸ்புக்கில் உள்ளது. தற்போது, இந்த ஃபேஸ்புக் இணையதளத்தில் பலர் போலியான பெயர்களுடன் வலம் வருகின்றனர். இன்னும் சிலர் தங்களது அடையாளங்களை முற்றிலும் மறைத்து உண்மைக்கு மாறான தகவலை பதிவேற்றம் செய்துள்ளனர்.

facebook_crimes-india

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களுடன் பழகி, அவர்களுடன் நெருக்கமாக இருக் கும் புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். இன்னும் சிலரை மிரட்டி பணம் பறித்துள்ளார். அவரை போலீஸார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஃபேஸ்புக் பயன் பாட்டாளர்கள் அதை கவனமாக கையாள வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர். ஃபேஸ்புக் மூலம் நடைபெறும் மோசடி குறித்து துணை ஆணையர் செந்தில் குமார் கூறும்போது, “இணைய தளம் மூலம் நடக்கும் மோசடி குறித்து புகார்கள் வருகின்றன. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஜார்ஜ், கூடுதல் ஆணையர் சங்கர் உத்தர விட்டுள்ளனர். இணையதள மோசடி விவகாரத்தில் ரகசியம் காக்கப் படுவது அவசியம். வெளியே தெரிந்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். எனவே, சில வழக்கு களை ரகசியமாக விசாரித்து குற்ற வாளிகளை கைது செய்கிறோம். சில நேரங்களில் குற்றவாளிகளை எச்சரித்து அனுப்புகிறோம்” என்றார்.

சைபர் கிரைம் அறிவுரை

* முகம் தெரியாத நபர்களிடம் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி, கல்லூரி, அலுவலக முகவரி உள்ளிட்ட தகவல்களை பகிர வேண்டாம்.

* ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.

* அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.

* நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக்கூடும் என்பதை மறவாதீர்கள்.

* அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்து விடுங்கள். அதுவும் பதிவு செய்யப் பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

* உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம்.

* குழந்தைகள், பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதைத் தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்கள் ஆபாசமான புகைப்படங்களாக மாற்றப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

* உங்கள் password-ஐ குடும்பத் தினர் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

* யாராவது உங்களை மிரட்டினால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவியுங்கள். இல்லை என்றால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவியுங்கள். உங்களது ரகசியம் காக்கப்படும்.

21,214 வழக்குகள்

சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக இந்தியா முழுவதும் கடந்த இரு ஆண்டுகளில் 21 ஆயிரத்து 214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில், 13 ஆயிரத்து 873 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை கடந்த 2 ஆண்டுகளில் 314 வழக்குகள் பதியப்பட்டு 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *