ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தூத்துக்குடியில் தீவிரமடைந்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.

அச்சங்களும் சந்தேகங்களும்

ஆலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள குமரெட்டியாபுரம் போராட்ட பூமியாக மாறியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மகேஷ்குமார், ‘‘ஸ்டெர்லைட்டால் சுத்துவட்டாரத்துல பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கு. ஆலையிலிருந்து வெளியேறும் சல்பர்-டை-ஆக்ஸைடு புகையால் மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல், சுவாசப் பிரச்சினை, நுரையீரல் பாதிப்பு, கருச்சிதைவு, ஆஸ்துமா, புற்றுநோயெல்லாம் வருது. இதுக்கிடையில் ஆலையை விரிவாக்கம் செஞ்சுட்டுருக்காங்க. மாத்து இடத்தில் வீடும், பணமும் தாரோம்னுகூடச் சொல்லுறாங்க. எங்க மண்ணைவிட்டு நாங்க எதுக்குப் போகணும்?’’ என்கிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த பத்மாவதி ‘‘ஆலைக்கு அருகில் வசிக்கும் பெண்களுக்கு மாதவிடாய்ச் சிக்கலும் இருக்கு. வெளியில் சொல்ல கூச்சப்பட்டு சொல்றதில்லை. ஆலை வந்த பிறகு, எனக்கு தோல் புற்றுய் வந்துடுச்சு. புற்றுநோயால இறக்குறவங்க எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது. ஒன்றரை கிலோமீட்டரில் ஆலை இருக்குறப்பவே இத்தனை பாதிப்புகள். இப்போ ஆலை அரை கிலோமீட்டருக்குள் வரப்போகுது. எப்படி அனுமதிக்க முடியும்?” என்கிறார்.

முன்பெல்லாம் 300 அடி வரைக்கும் ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுத்துவந்தனர் இப்பகுதி மக்கள். ‘இப்போது 60 அடியிலேயே தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் வருவதோ கழிவுநீர்! ஆலையில் தேக்கி வைக்கப்படும் கழிவுகளே இதற்குக் காரணம்’ என்கின்றனர். தாமிரபரணி ஆற்றிலிருந்து ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்குத் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுதாகவும், கோடை காலத்தில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும் சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஸ்டெர்லைட் என்ன செய்கிறது?

லண்டனில் செயல்பட்டுவரும் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத் தலைவர் அனில் அகர்வாலுக்குச் சொந்தமானதே ஸ்டெர்லைட் நிறுவனம். அந்நிறுவனத்தின் தாமிர ஆலைக்கு குஜராத், கோவா, மகாராஷ்டிரா என்று பல மாநிலங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு, கடைசியாகத்தான் தூத்துக்குடிக்கு வந்தது. 1994-ல் அதிமுக ஆட்சியில் அடித்தளம் அமைக்கப்பட்டது. 1996-ல் திமுக ஆட்சியில் செயல்படத் தொடங்கியது.

வேதாந்தா ரிசோர்சஸ்க்கு உலகின் பல நாடுகளிலும் தாமிரத் தாதுவை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இந்தச் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கும் தாமிரத் தாது, உருக்கப்பட்டு தாமிர கேத்தோடு கம்பிகளாக மாற்றப்படுகின்றன.

1996-ல் முதன்முதலாக தூத்துக்குடி துறைமுகம் வழியே, ஆலைத் தேவைக்கு தாதுப்பொருட்கள் வந்தன. அப்போதே, ஆலைக் கழிவுகளால் மீன்வளம் பாதிக்கப்படும் எனப் படகுகளின் மூலம் கடல்வழியே துறைமுக முற்றுகைப் போராட்டம் நடத்தினர் மீனவர்கள். தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடாவின் அருகிலுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகளை நிறுவக் கூடாது. ஆனால், அந்த விதிமுறையை ஸ்டெர்லைட் மீறியதாகவும் குற்றச்சாட்டு உண்டு. ஆலையிலிருந்து கடல்வரைக்கும் அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது.

1997 ஜூலை 5-ம் தேதியை அத்தனை எளிதில் கடந்துசெல்ல இயலாது. ஆலையிலிருந்து நச்சுப்புகை வெளியேறி, 150-க்கும் அதிகமானோர் மயங்கினர். சில கர்ப்பிணிகளுக்குக் கருச்சிதைவும் நிகழ்ந்ததாகச் சொல்கின்றனர். அப்போது அதிகாரிகள் ஆய்வுசெய்து ஆலையை மூடினார்கள். 38 நாட்களில் மீண்டும் ஆலை திறக்கப்பட்டது. அதற்கு சில வாரங்களுக்குப் பின்பு செம்புக் கலவை உலை வெடித்து இரண்டு தொழிலாளர்கள் பலியானார்கள். மீண்டும் சம்பிரதாய மூடல், அதன்பின் திறப்பு. 1999-ல் நச்சுப்புகை வெளியேறி, அருகிலிருந்த அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்கள் மயங்கிவிழுந்தனர்.

சர்ச்சைகள், வழக்குகள்

தாமிரத்தை உருக்கித் தகடுகளாக்கும்போது, அதன் உபபொருட்களாகக் கிடைக்கும் தங்கம், பிளாட்டினம், பாஸ்பாரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் உள்ளிட்டவையும் நல்ல விலை போகும். அதுகுறித்து அரசுக்கு சரியான தகவல்கள் கொடுப்பதில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு. இதே காரணத்துக்காக இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் 2010-ல் கைதுசெய்யப்பட்டார். அப்போது கலால் துறை, ஸ்டெர்லைட் நிறுவனம் 750 கோடிக்கு வரிஏய்ப்பு செய்திருந்ததாகத் தெரிவித்திருந்தது. கழிவுகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி, கட்டி வடிவில் விலையுயர்ந்த உலோகங்களை வரிகட்டாமல் அனுப்பிவைத்ததும் சர்ச்சையானது.

1996 நவம்பர் 7-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆலைக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார் மனுதாரரும், வழக்கறிஞருமான பிரகாஷ். இவ்வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி வைகோ மனுபோட, அவரையும் சேர்த்துக்கொண்டது உயர் நீதிமன்றம். வழக்கில், தானே ஆஜராகி வாதாடினார் வைகோ. உயர் நீதிமன்றமோ, தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்னும் ‘நீரி’யிடம் ஆலையை ஆய்வுசெய்து அறிக்கை கேட்டது.

ஆலைக்குள் பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளைக் குவிந்து வைத்துள்ளனர், ஆலை உள்ள சுற்றுவட்டாரக் கிராமங்களில் நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் அதிகளவில் உள்ளன என்று நீரி அறிக்கை கொடுக்க, ஆலையை மூட உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். ஆனால், அறிக்கையில் உள்ள குறைகளைக் களைந்துவிட்டதாக மனுசெய்து, சிறிய இடைவெளிக்குப் பின்பு மீண்டும் இயங்கத் தொடங்கியது ஸ்டெர்லைட். நீரியை மீளாய்வு செய்யக் கேட்டது உயர் நீதிமன்றம். மீளாய்வு அறிக்கை ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமாக இருந்தது. இந்நிலையில், 1996-ல் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 2010-ல் வந்தது. அதில் நீதிபதி எலிப்பி தர்மாராவ், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த ஸ்டெர்லைட், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றது. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் தீர்ப்புநாள் நெருங்கிவந்த நிலையில், 2013-ல் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்ஸைடு கசிந்தது. பலரும் மயங்கினர். தமிழக அரசே ஆலையை மூட உத்தரவிட்டது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ஆலை தொடர்ந்து இயங்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுசெய்தார் வைகோ. ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சீராய்வு மனு என அத்தனையிலும் ஸ்டெர்லைட்டே வெற்றிபெற்றது.

இத்தனைக்கும் நடுவில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் எனப் பலரும் போராடினர். 2013-க்குப் பின்பு அது வெகுமக்கள் போராட்டமாக மாறியது.

ஸ்டெர்லைட் தரும் விளக்கம்

ஸ்டெர்லைட்டின் தற்போதைய ஆண்டு உற்பத்தித் திறன் 4 லட்சம் டன். உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஆலையை விரிவாக்கம் செய்ய முயல, மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், ‘விரிவாக்கத்துக்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டில் கழிவுகள் வெளியேற்றுவது பூஜ்ஜியம் அளவுதான். கழிவுகளையும் சூழல் மாசு ஏற்படுத்தாதவகையில் பயன்படுத்துகிறோம். கடல்நீரை, நன்னீராக மாற்றியே பயன்படுத்த உள்ளோம். மாசு வெளியேற்றத்தையும் மிகக் கவனமாகக் கண்காணிக்கிறோம்.

ஸ்டெர்லைட் விரிவாக்கத்தின் மூலம் மேலும் பலருக்கு வேலை கிடைக்கும். ஸ்டெர்லைட் முன்பைவிட நான்கு மடங்கு உற்பத்தியை பெருக்கப்போகிறது என்பதெல்லாம் வதந்தி. ஒரு மடங்குதான் அதிகரிக்கப்போகிறோம்’ என்பதாக நீள்கிறது அறிக்கை.

ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டால், உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய தாமிர உற்பத்தி நிறுவனமாக ஸ்டெர்லைட் இருக்கும் என்பது அந்நிறுவனத்தின் அவதானிப்பு. அதேநேரத்தில், மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக தூத்துக்குடி மாறிவிடக் கூடாது என்பது முக்கியம் அல்லவா என்று கேள்வி எழுப்புகிறார்கள் அங்கு வாழும் மக்கள்!

*ஸ்டெர்லைட்_ஆலையும்_அதன்_பின்னனியும்*

1.உரிமையாளர் – அனில் அகர்வால்

2.தலைமையிடம் – இலண்டன், இங்கிலாந்து

3.நிறுவனப் பெயர் – வேதாந்தா ரிசோர்ஸ்

4.அமைத்துள்ள இடம் – தூத்துக்குடி

5.முக்கிய உற்பத்தி – தாமிரம் (copper )

6.கழிவு உற்பத்தி – தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம்

7.முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத்

8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத்,மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா,
கேரளா

9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் – மகாராஷ்டிரா , ரத்னகிரி

10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் – சரத்பவார்

11.அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு

12.அடிக்கள் நாட்டியவர் – முதல்வர் ஜெ.ஜெயலலிதா 1994

13.ஆலை இயங்க அனுமதியளித்தவர் – முதல்வர் மு.கருனாநிதி 1996

14.அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்

15.முதல் உண்ணாவிரத போராட்டம் -1996

16.போராட்டம் நீர்த்த காரணம் – தென் மாவட்ட சாதிசண்டை

17.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு – தாமிரபரணி

18.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7

19.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)

20.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)

21.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)

22.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு  றியாளர்-5,கூலித்
தொழிலாளி -1)

23.ஐந்தாம் விபத்து – ஆயில் டேங்க் வெடிப்பு

24.ஆறாம் விபத்து – நச்சுப்புகை வெளியேற்றும் அனுமதிக்கப்பட்ட உற்பத்தி
அளவு -70000டன்

25.உற்பத்தி செய்தது – 2லட்சம் டன் (2005 கணக்கில்)

26.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28

27.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா

28.மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து -உச்சநீதிமன்றம்

29.தமிழ்நாடு பசுமை வாரிம் – தடை

30.தேசிய பசுமை வாரியம் – அனுமதி

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *