சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 13ம் தேதி அதிகாலையில் 7 மீனவர்கள், இயந்திர மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டனர். அதே நாளில், மற்றொரு படகு இலங்கை கடற்படை கப்பலால் மோதப்பட்டதாகவும், படகின் பின்புறம் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிய வருகிறது.
நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாக்குகின்றன. இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில், 2024ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களில் பலர் இன்னும் இலங்கை காவலில் உள்ளனர் என்பதை இக்கடிதம் வாயிலாக குறிப்பிட விரும்புகிறேன். தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும், 50 மீனவர்களும் இன்னும் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடர்ச்சியான அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிடைக்கக்கூடிய அனைத்து தூதரக வழிகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மேலும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.