காதலி வெண்ணிலாவை (சான்வே மேகனா) சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்கிறார், நவீன் (மணிகண்டன்). எதிர்ப்பு இருந்தாலும், நவீன் வீட்டிலேயே இருவருடைய வாழ்க்கையும் தொடங்குகிறது. தன்னை கேவலமாக நினைக்கும் அக்கா கணவர் ராஜேந்திரன் (குரு சோமசுந்தரம்) முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கும் நவீனுக்குச் சந்தர்ப்ப சூழ்நிலையால் திடீரென வேலை பறி போகிறது. என்றாலும், குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் அவர், கடன் வாங்கி குவிக்கிறார். அது அவரை எங்கு கொண்டு நிறுத்துகிறது என்பதை கலகலப்பாகச் சொல்கிறது படம்.
குடும்பக் கதைகள் அருகி வரும் வேளையில், இந்தக் காலத்துக்கேற்ற கதையை இயக்கியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமியை பாராட்டலாம். வழக்கமான குடும்பக் கதைதான் என்றாலும் அந்தக் குடும்பத்தின் ஓட்டத்துக்காக நாயகன் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை ஏராள நகைச்சுவையுடன் தாராளமாகக் கொடுத்திருக்கும் திரைக்கதைதான் படத்தின் ஆகப் பெரும் பலம். அதை எழுதியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமிக்கும் பிரசன்னா பாலச்சந்திரனுக்கும் கொடுக்கலாம் பூச்செண்டு.