
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று (அக்டோபர் 22) காலை பத்தனம்திட்டா அருகே உள்ள ஹெலிபேடில் தரையிறங்கும் போது கான்க்ரீட் தளத்தில் டயர் சிக்கிக் கொண்டது. அதன்பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மீட்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேரளாவுக்கு நான்கு நாள் பயணமாக நேற்று புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். அவர் இன்று காலை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக புறப்பட்டார். முன்னதாக, அவர் செல்லும் ஹெலிகாப்டர் நிலக்கலில் தரையிறங்க திட்டமிடப்பட்டது, ஆனால் அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்டது.

