
புதுடெல்லி: பிஹாரில் நேற்று நடைபெற்ற 2-வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நேற்று மாலை முடிவடைந்ததை முன்னிட்டு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாயின. இதில் தே.ஜ கூட்டணி 130 முதல் 160 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
பிஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3.75 கோடி. முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் மீதம் உள்ள 122 தொகுதிகளில் நேற்று இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3.75 கோடி. நேற்று நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின.

