சென்னை: அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்துவது மற்றும் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காணொளி காட்சி வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;
தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்கவும், நம்மோட திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாக போய் பரப்புரை மேற்கொள்ளவும், கழகத்தில் அவர்களை உறுப்பினர்களா சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3-ஆம் தேதி தொடங்கினோம்.
தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர மக்களைத் தேடி வீடு வீடாகச் செல்கிறோம் என்பது மகிழ்ச்சி. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும் போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு கழக உடன்பிறப்புக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம்; நன்றி!
நமக்கு இன்னமும் 30 நாள் இருக்கிறது. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கழகத்தினர் கலந்துரையாடுவதை நாம் உறுதி செய்திட வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள – இழைக்க உள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம். அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
நாம் உருவாக்கியிருக்க பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் கழகத்துக்கு மிகப்பெரிய சொத்து. அவங்களை எதிர்வரும் சட்டன்றத் தேர்தலுக்கும் – தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லையெனில் அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
The post அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.