
கடந்த 1950 காலகட்டங்களில் ஆந்திராவில் பிரகாசம் மற்றும் விஸ்வநாதம் ஆகிய தலைவர்கள் தலைமையில் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி (கேஎம்பி) தொடங்கப்பட்டது. பின்னாளில் சோஷலிஸ்ட் கட்சியுடன் அது இணைந்து ராம் மனோகர் லோகியா தலைமையில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியாக (பி.எஸ்.பி) உருவானது. இக்கட்சி, அகில இந்திய அடிப்படையில் கொள்கைகளை மறுவடிவமைக்கும் நோக்கத்துடன் ஒரு பரந்த சோஷலிச சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.
பிரஜா சோஷலிஸ்ட் கட்சி என்று அழைக்கப்பட்ட சோஷலிஸ்டுகள் கடந்தகால இந்திய அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகித்தனர். நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கிட்டத்தட்ட 1975 வரை இந்தியாவில் சோஷலிஸ்டுகளின் அரசியல் களம் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. ஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெயபிரகாஷ் நாராயணன், ஜே.பி.கிருபளானி, முன்னாள் பிரதமர் சந்திரசேகர், அசோக் மேத்தா, சின்கா, சியாம் சுந்தர்தாஸ் ஆகியோர் பி.எஸ்.பி.யின் முக்கிய தளகர்த்தர்களாக செயல்பட்டனர். 1951-ல் தொடங்கப்பட்ட இந்த அரசியல் கட்சியில் இருந்து, வடபுலத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் கட்சிக்கு குடிசை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

