கர்நாடக மாநில பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் பிறகு பெரியார், நாராயண குரு ஆகியோரின் குறிப்புகள் பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்டன.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவுதினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, “ ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பூர்வீக இந்தியர்களா… ஆரியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களா… ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திராவிடர்களா… 600 ஆண்டுக்கால முகலாய ஆட்சிக்கு யார் பொறுப்பு… நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்கள் எப்படி வந்திருப்பார்கள்… அவர்களுக்கு யார் இடம் கொடுத்தார்கள்… 200 ஆண்டுக்கால ஆங்கிலேயர் ஆட்சிக்கு யார் காரணம்… கர்நாடகப் பாட புத்தகத்திலிருந்து பகத்சிங் உள்ளிட்ட தலைவர்களை நீக்கியது கண்டனத்துக்குரியது” என்றார்.

சித்தராமையாவின் பேச்சுக்கு பல பா.ஜ.க தலைவர்களும் தங்களது கண்டனத்தை முன்வைத்துவருகின்றனர். பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா கூறுகையில், “ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தலைவரைப் பின்பற்றாதவர்கள். இந்த மண்ணின் மைந்தர்களால் கட்டமைக்கப்பட்ட தேசபக்தி அமைப்பு ஆர்எஸ்எஸ். சித்தராமையா தனது கருத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *