
இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 800-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தக் கோளாறு காரணமாகப் பயணிகள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகினர். இதனால் பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் தங்கும் வசதி, உணவு வசதிகளை விமானநிலையம் ஏற்பாடு செய்தது.
இந்த விமான நிலையத்துக்கு தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தரவுகளை நிர்வகிக்கும் முக்கியமான தானியங்கி செய்தி மாற்று அமைப்பு (AMSS) செயலிழந்ததே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு பிரச்சினை இதற்கு முன் எப்போதும் நடந்தது இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

