சென்னை: கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம், 2 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்த நிலையில், ஒப்பந்தப்படி படப்பிடிப்பை தொடங்காததால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி நடிகர் ஜெயம் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய போதும், இதுவரை படப்பிடிப்பை துவங்காததால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனது. படப்பிடிப்பை நடத்தாததால் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. அதனால் படத்திலிருந்து விலகினேன். இதுகுறித்து தயாரிப்பாளருக்கு தகவல் தெரிவித்த போது, முன் பணமாக தந்த ஆறு கோடி ரூபாயை திருப்பித் தரும்படி தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்நிறுவனம் தயாரித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர் படத்தையும், தயாரிக்கும் வேறு படங்களையும் விற்கவும், வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் படி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த போது, முன்பணத்தை திருப்பி கொடுக்க நடிகர் ஜெயம் ரவி தயாராக உள்ளார். அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த பின் அத்தொகையை கொடுப்பதாகக் கூறியபோதும், 7 நாட்களில் முன்பணத்தை திருப்பித்தர கேட்கின்றனர். அவரால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை என்று ஜெயம் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகை பாலன் வாதிட்டார்.
பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஒப்பந்தத்தை மீறி நடிகர் ஜெயம் ரவி பராசக்தி படத்தில் நடித்துள்ளார் எனத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post ஒப்பந்தப்படி படப்பிடிப்பை தொடங்காத பிரச்னை; ரூ.9 கோடி இழப்பீடு கோரி நடிகர் ஜெயம் ரவி வழக்கு: தயாரிப்பாளர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.