
எனக்கு டப்பிங்கில் அதிக ஆர்வம் இருந்தது. ஆரூர்தாஸ் ஐயா மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முனைப்பாகச் சொல்லிக் கொடுப்பார். ‘இந்த இடத்துல உதடு ஒட்டாம பேசு, இந்த இடத்துல ‘இம்’-மை அரை சவுண்ட் வச்சுக்கோ, இந்த இடத்துல ஏத்திப் பேசணும், இங்க வார்த்தையை இறக்கிப் பேசணும்’என்று சொல்லித்தருவார். அதே போல மருதபரணி அவர்கள் ‘காஷ்மீரம்’ என்ற மலையாளப் படத்துக்கு தமிழ் டப்பிங் செய்தார். அது ‘ரோஜா’ படம் மாதிரியான கதை.
சுரேஷ் கோபி ஹீரோவாக நடித்த அதில் தேஜ் சப்ரூ என்ற இந்தி நடிகர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு நான் டப்பிங் பேச வேண்டும். மலையாளத்தில் இந்தி மொழியிலேயே வசனங்களை வைத்திருந்தார்கள். தமிழ் டப்பிங்கில் அவர் பேச்சுக்கு இடையில் தமிழில் பேச வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள்.

