ஓசூர்: காஷ்மீர்-குமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, ஓசூர் மேம்பால இணைப்பு விலகியதால் 2வது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக காஷ்மீர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் கனரக வாகனங்கள் மற்றும் கார், பஸ்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஓசூர் பேருந்து நிலையத்தையொட்டி உள்ள பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆண்டுக்கு முன், உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் வழியாக அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று மதியம் இந்த மேம்பாலத்தில் இணைப்பு பகுதி விலகி உள்ளதாக பணியாளர்கள் சிலர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.இதன்பேரில், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொறியாளர் பிரசன்னா தலைமையிலான பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்தனர். அந்த வழியாக வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டால், இணைப்பு பகுதி மேலும் விலகும் அபாயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மேம்பாலம் வழியாக சென்னை-பெங்களூரு செல்லும் வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
இன்று 2வது நாளாக அனைத்து வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஓசூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலை வழியாகவும், ரிங் ரோடு வழியாகவும் மாற்றி விடப்பட்டன. இதனால், வாகனங்கள் பேருந்து நிலையம் வழியாக தர்கா வரை சென்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்கிறது. 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் மாற்றி விடப்பட்டதால், நகரின் மையப்பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
The post காஷ்மீர்-குமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓசூர் மேம்பால இணைப்பு விலகியதால் 2வது நாளாக போக்குவரத்துக்கு தடை appeared first on Dinakaran.