Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கீழடி தமிழர் தாய்மடி; தமிழ் என்றாலே கசப்புடனும் தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கீழடி தமிழர் தாய்மடி; தமிழ் என்றாலே கசப்புடனும் தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

EDITOR

சென்னை: கீழடி தமிழர் தாய்மடி தமிழ் என்றாலே கசப்புடனும் தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதாவது; நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். பாண்டிய மன்னரின் படைகள்தான் மறுபடியும் அணிவகுத்ததோ, பட்டாளச் சிப்பாய்கள்தான் களம் புகுந்தனரோ என விழிகள் வியந்து பார்க்கின்ற வகையில் மதுரை விரகனூர் சாலையில் ஜூன் 18-ஆம் நாள் தி.மு.கழக மாணவரணியினர் அன்னைத் தமிழின் பெருமை காத்திடக் களமிறங்கினர்.

தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து, திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் கழக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு. மாணவரணிச் செயலாளர் சகோதரர் இராஜீவ்காந்தியும் மாணவரணியின் துணைச் செயலாளர்களும் ஒருங்கிணைந்து, மாணவர்கள் – இளைஞர்கள் – இளம்பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து,

‘கீழடி தமிழர் தாய்மடி‘ என்ற முழக்கத்துடன் புறநானூற்று வீரர்கள் போல ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டாக உணர்ச்சிமிகு குரலெழுப்பி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை, கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையிலும் பாராட்டி மகிழ்கிறேன். கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும்.

நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2016 செப்டம்பர் 29 அன்று தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “கீழடியில் உள்ள கட்டடங்களும், கிடைத்திருக்கும் பழங்காலப் பொருள்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன. கட்டடங்கள் சதுரம், செவ்வகம், நீள்சதுர வடிவங்களில் உள்ளன. கட்டடங்கள் தெற்கு வடக்காகக் கட்டப்பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கருப்பு-சிகப்பு நிறத்திலான மண் பானைகள் கிடைத்துள்ளன.

சுடு செங்கற்களால் உற்பத்தி செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள் கிடைத்துள்ளன. தந்தம், செம்பு, இரும்பு ஆகியவை பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அகழாய்வில் மொத்தம் 5,300 பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதன் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தை கொண்டதல்ல என்ற கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.

சிந்துசமவெளி நாகரிகத்தைப் போல இங்கும் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்கு கிடைத்துள்ளன” என்று பதிவிட்டு மகிழ்ந்ததுடன், “ஹரப்பாவை ஒத்த தமிழர் நாகரிகத்திற்கான கீழடி சான்றுகளை உடனடியாகக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால், அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும்” என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்.

மூத்த மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர், 2016-ஆம் ஆண்டிலேயே கீழடி ஆய்வுகளின் பெருமையை உலகத்தவர் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிட்டிருப்பதன் மூலம், வரலாற்றில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தனித்துவமான முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார். அதேவேளையில், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அப்போதே எச்சரித்தும் இருக்கிறார்.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் எச்சரித்தது போலவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 2013-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியத் தொல்லியல் துறையால் வைகை ஆற்றங்கரையில் தள ஆய்வு நடத்தப்பட்டு, கீழடி ஒரு முக்கிய குடியிருப்புத் தளம் என அடையாளம் காணப்பட்டது.

அதன் பின்னர் அகழாய்வு தொடர்ந்த நிலையில் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3 கட்டங்களோடு கீழடி அகழாய்வை நிறுத்திக் கொண்டது. மீதமிருந்த 7 கட்டங்களையும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டது. தொல்லியல் பணிகளை மேற்கொண்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை அசாம் மாநிலத்திற்கு இடமாறுதல் செய்து தமிழ்ப் பண்பாட்டின் மீதான வெறுப்புணர்வை பா.ஜ.க. அரசு அப்பட்டமாகக் காட்டியது.

எனினும், அமர்நாத் ராமகிருஷ்ணா 2016-இல் கீழடி அகழாய்வு குறித்த தொடக்க அறிக்கையையும், 2017-ஆம் ஆண்டில் இடைநிலை அறிக்கையையும் இந்திய அரசின் தொல்லியல் துறையிடம் வழங்கினார். சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு அவர் மீண்டும் வந்து பணியாற்றினார். கீழடி அகழாய்வின் வாயிலாகத் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் ஏறத்தாழ 2500 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது தெளிவாகிறது. இது வெறும் கருத்துரீதியான தகவல் அல்ல.

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை வகைப்படுத்தி உள்நாட்டிலும் – உலகளவிலும் உள்ள சிறந்த ஆய்வுக்கூடங்களான புனே, பெங்களூரு, அமெரிக்காவின் புளோரிடா மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கு அனுப்பி அங்கு ராயல் டெஸ்டிங், கெமிக்கல் டெஸ்டிங், கார்பன் டேட்டிங் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அறிவியல்பூர்வமாக முடிவுகள் பெறப்பட்டு, அதனடிப்படையிலேயே 2023-ஆம் ஆண்டு 982 பக்க இறுதி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் சமர்ப்பித்தார்.

இத்தனை ஆய்வுகள், அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பா.ஜ.க. அரசின் அப்பட்டமான தாக்குதல்.

தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.க., இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை. ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட அதனை ஏற்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மனது வரவில்லை. அந்தளவுக்குத் தமிழினத்தின் மீதான வெறுப்பு அந்தக் கட்சியின் கொள்கைகளில் ஊறிக் கிடக்கிறது.

அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மொழிவெறி – இனவெறி நடவடிக்கை பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்கவில்லை. அ.தி.மு.க.வை பா.ஜ.கவிடம் அடகுவைத்த பழனிசாமி எப்படி வாய் திறப்பார்? ஏற்கனவே அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒருவர், தமிழர் நாகரிகமான கீழடியை ‘பாரத நாகரிகம்‘ என்று பா.ஜ.க. மனம்குளிரும் வகையில் விளம்பியவராயிற்றே!

தமிழ் மொழி – பண்பாடு – தமிழர் பெருமையைப் போற்றிப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் தி.மு.க. ஆட்சியில்தான் கீழடியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு, அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. தொன்மை மிக்க தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களை அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் இன்றைய தலைமுறையினர் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் கீழடி அருங்காட்சியகம் திகழ்கிறது.

தமிழ்ப் பண்பாட்டின் காலம் 5300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை கொண்டதாக இருப்பதை இரும்பின் தொன்மை என்ற பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுகள் வாயிலாக நிரூபித்துள்ளோம். வரலாற்றுப் பெருமை மிக்க அந்த ஆய்வு முடிவுகளை திராவிட மாடல் அரசு வெளியிட்டது. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழ்மொழி இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருக்கிறது.

தமிழர்கள் இந்திய குடிமக்களாக வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட பிரதமர் தொடங்கி பா.ஜ.க. ஆட்சியினருக்கு மனம் வரவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க.வினரும் தங்கள் இன – மொழி உணர்வைப் பதவிக்காகத் தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைக் காக்கவும், அதை நிறுவவும் வேண்டிய பெரும் பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழுணர்வுகொண்ட அதன் தோழமை சக்திகளுக்கும் மட்டுமே இருப்பதால்தான், கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் என்கிற வகையில் கழக மாணவரணி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் – கழக நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவருமான திருச்சி சிவா இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றியுள்ள உணர்ச்சிமிகு எழுச்சியுரை, களம் நோக்கி பாயும் ஏவுகணைகளாக மாணவப் பட்டாளத்தை ஆயத்தமாக்கியுள்ளது. மாணவப் பருவத்திலேயே கழகத்தில் ஒப்படைத்துக்கொண்டு, கழக மாணவரணிச் செயலாளராகவும் செயலாற்றியவராயிற்றே அவர்!

ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட உதவிய மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் கழக நிர்வாகிகள், மாணவரணிச் செயலாளர் சகோதரர் இராஜீவ் காந்தியுடன் துணை நின்ற மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலையிலுமான கழக மாணவரணி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உங்களில் ஒருவனான என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

தமிழர் நலனையும் தமிழின் பெருமையையும் காப்பதற்குக் கழகம் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கும் கொள்கைவழிக் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில், கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி , கழகத்தின் சார்பில் பங்கேற்று முழக்கமிட்டு உணர்வை வெளிப்படுத்திய தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல்.திருமாவளவன் எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் எம்.அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., ம.தி.மு.க கொள்கை விளக்க அணிச் செயலாளர் வந்தியத்தேவன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை கழகத்தின் போராட்டம் ஓயவே ஓயாது!

The post கீழடி தமிழர் தாய்மடி; தமிழ் என்றாலே கசப்புடனும் தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் – ஜூலை 1ல் தொடக்கம்

June 25, 2025

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அண்ணாமலையார் கோயிலில் ரூ.200 கோடியில் பெருந்திட்ட வரைவு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

July 17, 2025

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தில் மழை நீடிக்கும்: கோவைக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’

June 26, 2025

நாளை திருநாவுக்கரசர் பிறந்தநாள்; ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: முன்னாள் மாவட்ட தலைவர் க.வீரபாண்டியன் ஏற்பாடு

July 12, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?