சென்னை: வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீஸார் ஒட்டிய சம்மனை கிழித்த நாதக நிர்வாகி மற்றும் போலீஸாரை தாக்கிய காவலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் காவலாளி வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், அடுத்த சில நாட்களில், விஜயலட்சுமி அந்த புகாரைத் திரும்பப் பெற்றார். மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நடிகை விஜயலட்சுமி, திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.