ஆண்டுக்கு இரண்டு முறை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்திருப்பது புதிய மாற்றமாக வந்துள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இதுவரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தேர்வெழுதும் நடைமுறை இருந்து வந்தது. தோல்வியடையும் மாணவர்களுக்கு மட்டுமே ஓரிரு மாதங்களில் இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது பிப்ரவரி மற்றும் மே மாதம் என இரண்டு முறை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை-2020 அமல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு உள்ள தேர்வு பயத்தைக் குறைக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப் போவதாக வரைவு அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் சிபிஎஸ்இ வெளியிட்டு இருந்தது. பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்ட பின்பு இத்திட்டத்தை வரும் 2026 கல்வியாண்டு முதல் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.