சென்னை: சென்னை மணலி-சடையங்குப்பம் பகுதியில் கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்குவதில் முக்கிய துணைமின் நிலையமான மணலி 400/230–110 கி.வோ. வலிம காப்பு துணை மின்நிலையம் மற்றும் அதிஉயர் மின்னழுத்த கோபுரங்களில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு, மின் பரிமாற்ற முறைகள், அதிஉயர்மின் கோபுரங்களின் விரிவான கள நிலவரம் மற்றும் தடையற்ற மின்சாரம் வழங்குவதில் மின் கட்டமைப்பில் உள்ள சவால்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து நேரில் சென்று மதிப்பாய்வு செய்தார்.
ஆய்வின் போது, களக் குழு, அதிஉயர் மின்னழுத்தப்பாதைகளை பராமரிப்பதில் உள்ள சவால்கள், சிக்கல்கள் மற்றும் எதிர்பாராவண்ணம் மின்தொடரமைப்பு பாதைகளில் ஏற்படும் இணைப்பு மின்கம்பிகள் துண்டிப்புகளை கட்டுப்படுத்தும் சிக்கலான செயல்முறைகளைப் பற்றி விரிவாக கேட்டரிந்தார். கள குழுக்கள் சமீபத்தில் இரண்டு கோபுரங்களில் அதிக ஆபத்துள்ள, உயர் மின்னழுத்த பராமரிப்பு பணி மற்றும் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்தது. இரண்டு டவர்களில் பணியாற்றிய பிறகு, பணியாளர்கள் அவசர நிலைகளில் கம்பிகள் முறிவடையும் சூழ்நிலைகளில், அவற்றை மீளமைக்கும் பணியின் சவால்கள், நுட்ப விவரங்கள் மற்றும் கடினத்தன்மைகள் குறித்து நேரில் விளக்கம் அளித்தனர்.
அவசர நிலைகளை நிர்வகிப்பதில் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில், அவர்களின் தொழில்நுட்ப திறமையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய ஜெ. ராதாகிருஷ்ணன், “பொதுமக்களுக்கு தடையில்லா மின் விநியோகம் உறுதிப்படுத்த, மின்தடைகள் ஏற்படாத வகையில் தடுப்புச் செயல்முறைகள் மற்றும் முன்கூட்டிய பராமரிப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, தண்டையார்பேட்டை கோட்ட செயற்பொறியாளர் எம்.என். ஜெகதீஷ்துமார், மணலி 400 கி.வோ. செயற்பொறியாளர் (இயக்கம்) உஜ்ஜயந்தி, பராமரிப்பு உதவி செயற் பொறியாளர் வெங்கடராமன் மற்றும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு (P&C) பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
The post சென்னை மணலி-சடையங்குப்பம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு appeared first on Dinakaran.