சென்னை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கை: இஸ்லாமியர்களின் பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு. மாதம் முழுக்க நோன்பிருந்து இறைவனைத் தொழும் இந்த வேளையில் அவர்களின் பசிப்பிணி போக்க; தாயுள்ளத்தோடு, தந்தையுள்ளத்தோடு பெரும் கொடை அளித்துள்ளார்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்காக 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 8 மெட்ரிக் டன் பச்சரிசி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மசூதிகளிலும் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களைக் காட்டிலும், அதிகளவு அரிசி தந்ததன் மூலம் கலைஞரின் தாயுள்ளத்தையும் விஞ்சி நிற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் ஹஜ் ஹவுஸ் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு இடம் பரிந்துரை செய்து வருகிறது. சென்னை புதிய விமான நிலையத்திற்கும், பழைய விமான நிலையத்திற்கும் நடுவில் அமைய இருக்கும் இந்த ஹஜ் ஹவுஸ் இஸ்லாமியர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு 2025 ஹஜ் பயணம் மேற்கொள்வோர் அனைவருக்கும் மானியத் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கிட, முழு தொகையையும் கொடுப்பதற்கு முன் வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை மறுமலர்ச்சியை இஸ்லாமியர்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கிறது.
நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்து இஸ்லாமியர்களும் ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தப் பணம் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்டங்களை இஸ்லாமியர்களுக்கு அளித்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு முழுக்க இருக்கும் இஸ்லாமியர்கள் சார்பிலும், ஒட்டுமொத்த இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை விமான நிலையத்தில் ஹஜ் இல்லம் : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் நன்றி appeared first on Dinakaran.