கோவை: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடுரோட்டில் காதலனை இளம்பெண் தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நேற்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. முகாம் முடிந்த நிலையில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பணிகளை முடித்து தங்களது வீடுகளுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு இளம் காதல் ஜோடி பேசி கொண்டு இருந்தனர். அவர்கள் திடீரென பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அந்த இளம்பெண், தனது காதலனின் கன்னத்தில் பளார் என அறைந்ததுடன் முகத்தில் ஓங்கி குத்தினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு வந்து இருவரையும் தடுத்து நிறுத்தி, விசாரித்தனர். விசாரணையில், வடவள்ளியை சேர்ந்த அந்த பெண்ணை, திருப்பூர் அவிநாசிபாளையத்தை சேர்ந்த வாலிபர் கடந்த 9 மாதமாக கோவையில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி குடும்பம் நடத்தி விட்டு ஏமாற்றியதாகவும் கூறினார். மேலும், அந்த காதலனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வந்தால் மட்டுமே தான் அங்கிருந்து செல்வேன் என அடம்பிடித்தார். இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்து இருவரையும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக போலீசார் இருவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் ஜோடி இருவரும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் இடையே அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தியது.
The post திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடுரோட்டில் காதலனை தாக்கிய இளம்பெண்: கோவையில் பரபரப்பு appeared first on Dinakaran.