திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ரயில்வே கேட்டை மூடாததால், எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. எனவே, அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக நாகர்கோயில்- காச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் 13ம் தேதி நாகர்கோயிலில் இருந்து காச்சிகுடாவுக்கு சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில், திருக்கோவிலூர்- திருவண்ணாமலை இடையே தண்டரை கிராமத்திற்கு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது அங்கிருந்த ரயில்வே கேட் மூடப்படாததால் சிக்னல் விழவில்லை என கூறப்படுகிறது. அதனால், நடுவழியிலேயே எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திவிட்டு, லோகா பைலட் கீழே இறங்கி வந்தார். பின்னர், ரயில்வே கேட் மூடாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கேட் கீப்பரின் அலட்சியத்தால் கேட் மூடாதது தெரியவந்தது.
பின்னர், லோகோ பைலட் ரயில்வே கேட்டை மூடிவிட்டு சென்றார். இதனால் சில நிமிடங்கள் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதுதொடர்பாக, எக்ஸ்பிரஸ் ரயில் லோகோ பைலட் திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட உயர் அலுவலர்களுக்கு புகார் அளித்தார். அதன் பேரில், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் ராமு என்பவரை தெற்கு ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. லோகோ பைலட் ரயிலை நிறுத்தி கேட்டை மூடாமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஏற்கனவே ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால், பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
The post திருவண்ணாமலை அருகே பரபரப்பு நடுவழியில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்: கேட் கீப்பர் அதிரடி சஸ்பெண்ட், பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.