சென்னை: தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவனர் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை, தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. இந்த சபைக்கு சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறங்கள் இடம்பெற்றுள்ள கொடி உருவாக்கப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு வர்த்தக முத்திரைக்கான பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே பதிவு செய்த குறிப்பிட்ட நிறங்களை கொண்ட கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது.
இந்த நிலையில் தவெக கட்சி தலைவர் விஜய் கடந்த 2024 தொடங்கி கட்சியின் கொடி அறிமுகம் செய்தார். அதில் சிகப்பு, மஞ்சள், சிகப்பு நிறங்கள் இடம் பெற்றிருந்தது. எனவே, தவெக கட்சி கொடியில் உள்ள வர்ணங்களை நீக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே தவெக கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தவெக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள வர்ணத்தை நீக்ககோரி மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
The post நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கொடி நிறம் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு appeared first on Dinakaran.