புதுச்சேரி: லஞ்ச வழக்கில் பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர், செயற்பொறியாளரை சிபிஐ கைது செய்துள்ள நிலையில் துறை அமைச்சர் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட சென்ற முன்னாள் முதல்வர், 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸாரை போலீஸார் கைது செய்தனர். விரைவில் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை சிபிஐ-யிடம் தரவுள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார்.
லஞ்சம் பெற்ற வழக்கில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், மன்னார்குடி தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த இளமுருகன் ஆகிய மூன்று பேரை காரைக்காலில் சிபிஐ கைது செய்தது. பொறியாளர்கள் வீட்டில் இருந்து ரூ.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.தலைமைப் பொறியாளர் கைதாகியுள்ள நிலையில் அவரது டைரி, கைபேசிகளை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.