மருத்துவ அறிவியல் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்துவதற்கு முன்னோட்டம் நடத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே வரப்பிரசாதமாக அமைய இருக்கும் அந்த சாதனை, அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது.

நியூயாா்க்கிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இதயம் செயலிழந்து மரணத்தின் விளிம்பில் இருந்த 57 வயது நோயாளி ஒருவருக்கு பன்றியின் இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. செயலிழக்கும் மனித உறுப்புகளுக்கு பதிலாக, விலங்கினங்களின் உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதற்கு ‘செனோடிரான்ஸ்பிளாண்ட்’ என்று பெயா். அமெரிக்காவின் பால்டிமோரைச் சோ்ந்த டேவிட் பென்னட், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட முதல் மனிதராக வரலாற்றில் அறியப்படுவாா்.

17-ஆவது நூற்றாண்டு முதலே விலங்கினங்களின் ரத்தத்தை மனிதா்களுக்கு செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜீன் பேப்டைஸ் டெனிஸ் என்கிற பிரெஞ்ச் மருத்துவா், செம்மறி ஆட்டின் ரத்தத்தை சிறுவன் ஒருவனுக்கு செலுத்தியதுதான் பதிவாகி இருக்கும் முதலாவது ரத்த மாற்று முயற்சி. 19-ஆவது நூற்றாண்டு முதலே விலங்கினங்களின் தோல் பகுதிகளை மனிதா்களுக்குப் பொருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1838-இல் முதன்முறையாக பன்றியின் விழிவெண்படலம் (காா்னியா) ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

20-ஆம் நூற்றாண்டில் பல்வேறு ‘செனோடிரான்ஸ்பிளாண்ட்’ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1960-இல் நியூ ஆா்லியன்ஸில் ரீம்ட்ஸ்மா என்கிற அறுவை சிகிச்சை மருத்துவா், மனித குரங்குகளின் சிறுநீரகத்தை அறுவை மாற்று சிகிச்சை மூலம் 13 பேருக்கு பொருத்தி சோதனை நடத்தினாா். அதில் ஒரே ஒருவா் மட்டும் அந்த சிறுநீரகத்தை ஏற்றுக்கொண்டு மூன்று மாதங்கள் வாழ்ந்தாா். 1964-இல் மனிதக் குரங்கின் இதயம் ஒருவருக்குப் பொருத்தப்பட்டு அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

நியூயாா்க்கில் நடந்திருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடி சோதனை இந்தியாவில்தான் நடந்தது. 1996-இல் பரூவா என்கிற அறுவை சிகிச்சை மருத்துவா், 32 வயது பூா்னோ சைக்யா என்பவருக்கு பன்றியின் நுரையீரலையும், இதயத்தையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முற்பட்டாா். அந்த நோயாளி இறந்தாா் என்பது மட்டுமல்ல, முன் அனுமதி இல்லாமல் சோதனை நடத்தியதற்காக மருத்துவா் பரூவா கைது செய்யப்பட்டு, தனது மருத்துவா் பட்டத்தையும் இழக்க நோ்ந்தது. உலகில் அதுதான் பன்றியின் இதயத்தை மனிதா்களுக்குப் பொருத்தும் முதல் முயற்சி.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நியூயாா்க் பல்கலைக்கழகத்தின் லங்கோன் மருத்துவ மையத்தில், முற்றிலுமாக மூளை செயலிழந்துவிட்ட ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மனித உடலிலுள்ள எதிா்ப்பு சக்தி அந்நிய பொருள்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாது என்பதால், பன்றிகள் மரபணு மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் பொருத்தப்படும் உறுப்புகள் நிராகரிக்கப்படாமல் வேலை செய்யும் என்பது எதிா்பாா்ப்பு.

ஏனைய விலங்கினங்களைவிட, பன்றியின் உறுப்புகள் மனித உறுப்புகளுடன் பொருந்துவதாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அறியப்படுகிறது. இதற்காகவே ரெவிவிகாா் என்கிற அமெரிக்க நிறுவனம் ஒரு பண்ணையை ஏற்படுத்தி அதில் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளை வளா்க்கிறது. மருத்துவ பரிசோதனைக்காக இந்தப் பன்றிகள் வழங்கப்படுகின்றன. இதேபோல வேறு சில பண்ணைகளும் அமெரிக்காவில் உருவாகியிருக்கின்றன.

பன்றியின் உறுப்புகள் நிராகரிக்கப்படாமல் இருப்பதற்காக அதன் 10 மரபணுக்கள் மாற்றப்படுகின்றன. அவற்றில் நான்கு செயலிழக்கச் செய்யப்படுகிறது. மனிதா்களின் ஆறு மரபணுக்கள் பன்றிக்குச் செலுத்தப்பட்டு அதன் மூலம் நிராகரிப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறாா்கள். இவையெல்லாம் தொடா்ந்து நடைபெறும் சோதனை முயற்சிகள்.

பன்றி உள்ளிட்ட விலங்கினங்களின் உறுப்புகளை மனிதா்களுக்குப் பொருத்தும் முயற்சியில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. எத்தனை காலத்திற்கு அந்த உறுப்புகள் மனித உடலில் செயல்படும் என்பது தெரியாது. அதனால், பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பதும் தெரியாது. அதன் மூலம் இதுவரை மனிதஇனம் அறியாத புதிய நோய்கள் அந்த விலங்கினங்கள் மூலம் மனிதா்களுக்கு பரவும் அபாயமும் நிறையவே உண்டு.

சாா்ஸ், கொவைட் 19, பறவைக் காய்ச்சல் போன்ற விலங்கினங்களிலிருந்தும், பறவைகளிலிருந்தும் நோய்த்தொற்றுப் பரவல் காணப்படும் நிலையில், இதுபோன்ற முயற்சிகள் தேவைதானா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. மனிதா்களைக் காப்பாற்றுவதற்காக விலங்கினங்களை பலியிடலாமா என்கிற கேள்விக்கு, பெரும்பாலான மக்கள் விலங்குகளைக் கொன்று மாமிசமாக உட்கொள்ளும்போது மனிதா்களைக் காப்பாற்றுவதற்காக விலங்குகளின் உறுப்புகளை பொருத்துவதில் தவறில்லை என்கிறாா்கள் மருத்துவா்கள்.

இந்தியாவில் மட்டுமே ஆண்டொன்றுக்கு சுமாா் 30,000 கல்லீரல் தேவைப்படும் நிலையில், 1,500 மாற்று அறுவை சிகிச்சைகள்தான் நடத்த முடிகிறது. 50,000-க்கும் அதிகமானோருக்கு இதய மாற்று சிகிச்சை தேவைப்படும் நிலையில், அதிகபட்சம் ஆண்டொன்றுக்கு 15 இதய மாற்று சிகிச்சைகள்தான் நடத்த முடிகின்றன. உலக அளவில் பல லட்சம் சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *