சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதால், ஊகத்தின் அடிப்படையில் இபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளில் இறுதி முடிவு காணும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரி்த்த உயர் நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் தொடர்பான சூரியமூர்த்தியின் மனுவை 4 வாரங்களில் பரிசீலித்து, உரிய முடிவு எடுக்குமாறும், ஓபிஎஸ், இபிஎஸ் என அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு முடிவு எடுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு டிச. 4-ம் தேதி உத்தரவி்ட்டிருந்தது.