தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது, அவர் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக பந்தல்குடி கழிவுநீர் கால்வாயை அதிகாரிகள் அலங்காரத் துணி கொண்டு மறைத்திருந்த சம்பவம் அப்போதே விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோன்று, சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொள்ள சென்றபோது, ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய் இருப்பதையும், மறுபுறம் குடிசைகள் இருப்பதையும் மறைக்கும் வகையில் அலங்காரத் திரை அமைக்கப்பட்டுள்ளது.
சுத்தம், சுகாதாரமற்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் கால்வாயும், ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதியும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று திரையிட்டு மறைப்பது என்ன நியாயம்?