சியோல்: தென் கொரியாஉலக அளவில் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் முதல் இடத்தில் உள்ள தென் கொரியாவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 0.75 சதவீதம் பிறப்பு விகிதம் அதிகரித்து இருக்கிறது. தென் கொரியாவில் கல்வி, வேலைவாய்ப்பில் கடும்போட்டி, பாலின சமத்துவமின்மை, அதிக வாழ்கை செலவு போன்ற கரணங்கள் திருமணத்தை இளைஞர்கள் தள்ளிப்போடுவது அதிகரித்து வந்தது. மேலும், பொருளாதார நிதிநிலை காரணமாகவும், திருமண வாழ்வில் ஆர்வம் இல்லாத போக்காலும் இளைய தலைமுறையினர் குழந்தை பெற ஆர்வம் காட்டவில்லை என்று பல அறிக்கைகள் தெரிவித்தன.
இறப்பை விட பிறப்பின் விகிதம் குறைந்து வருவதால் அந்த நாட்டின் 5 கோடியே 18 லட்சம் என்ற மக்கள் தொகை 2050க்கு பிறகு 3 கோடியாக குறையும் என கணிக்கப்பட்டது. திருமணம், குழந்தை பிறப்பு தொடர்பாக சமூக மனப்பான்மையில் மிகபெரிய மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்தது. இதையடுத்து திருமணம் மற்றும் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க வரி குறைப்பு, மானியங்கள் போன்ற நடவடிக்கைகளை கடந்த 5 ஆண்டுகளாக தென்கொரியா அரசு மேற்கொண்டது.
இதன் விளைவாக 9 ஆண்டுகளுக்கு பிறகு தென் கொரியாவில் பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதுவும் 0.75 விழுக்காடு உயர்வு என்பது 1980க்கு பிறகு அந்த நாட்டில் பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிகரிப்பாக பார்க்கப்படுகிறது. தென் கொரியாவில் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டோரின் எண்ணிக்கையும் 15 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலக அளவில் தென் கொரியாவிற்கு அடுத்தபடியாக ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. உலக அளவிலேயே பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுக்கிறது.
The post குடும்ப வாழ்வில் ஆர்வம் காட்டாத இளம் தலைமுறையினர்: தென் கொரியாவில் 9 ஆண்டுகளுக்குப்பிறகு அதிகரித்த பிறப்பு விகிதம்! appeared first on Dinakaran.