சென்னை: நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிகப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் 12 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சீமான் மீதான வழக்கு தொடர்பான புதிய ஆதாரங்களை நடிகை விஜயலட்சுமி நேற்று வளசரவாக்கம் போலீசிடம் வழங்கினார். அதேபோல முதல்கட்டமாக வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகினர். ஆஜராவதில் இருந்து 4 வாரங்கள் அவகாசம் தருமாறு வழக்கறிஞர் மூலம் வளசரவாக்கம் போலீசில் சீமான் கடிதம் எழுதியிருந்தார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக இன்று போலீஸ் முன் ஆஜராக இயலவில்லை என சீமான் விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்ற போலீசார் சம்மனை ஒட்டினர். சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. சீமான் உத்தரவின்பேரில் அவரது வீட்டில் வேலை செய்யும் ஊழியர் சம்மனை கிழித்தார்.
இந்நிலையில் சீமான் வீட்டுக்கு மீண்டும் வந்த போலீசாரை பணி செய்ய விடாமல் சீமானின் உதவியாளர்கள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உதவியாளர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரை தாக்கிய காவலாளியை காவல்துறையினர் ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்து எறிந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் பரபரப்பை அடுத்து வீட்டுக்கு வெளியே வந்த சீமானின் மனைவி, போலீசாரிடம் சாரி என்று மன்னிப்பு கேட்டார். இதனால் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் பங்களாவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் சீமானை கைதுசெய்து விசாரிப்பது பற்றி சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
The post சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு: சென்னை நீலாங்கரையில் உச்சக்கட்ட பரபரப்பு!! appeared first on Dinakaran.