
ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சியின் தோற்றம் மற்றும் அதன் வீழ்ச்சி குறித்து கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இருப்பினும் தமிழகத்தில் சுதந்திரா கட்சியின் தாக்கம் எப்படி இருந்தது. அக்கட்சியின் தளகர்த்தர்களாக செயல்பட்டவர்கள் யார் என்பதைக் குறித்து அறிந்து கொள்வது அவசியம். இதுகுறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அதன் செயல்பாடுகளில் இருந்தும் ராஜாஜி ஒதுங்கிக் கொண்டபோதும், அவ்வப்போது அரசியல் கருத்துகளையும், முக்கிய விடயங்களில் தன்னுடைய நிலைப்பாட்டையும் தெரிவித்துக் கொண்டே வந்தார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ளவும் இல்லை. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலுவான ஒரு எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்று ராஜாஜி விரும்பினார். அதற்காகவே தனது அரசியல் பயணத்தை வழியமைத்துக் கொண்டார். ‘ராஜாஜி ஓர் சத்தியாக்கிரகி. பலம் பொருந்திய ஒரு ஸ்தாபனத்துக்கு நிகரானவர்’ என்று காந்தியடிகளே அவரை வியந்து பாராட்டியது உண்டு.

