சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆதித்ய சோழன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் தற்போது பதவியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன்.
அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை வழங்குமாறு கோரியிருந்தேன். எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தும் தகவல்கள் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி கேட்கப்பட்ட தகவல்களை தர மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.
எனவே, தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.மாலா, மேல்முறையீடு மீது பன்னிரெண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
The post தமிழகத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்கள் என்ன? மாநில தகவல் ஆணையர் 12 வாரத்தில் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.