உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடைமுறையை வெற்றிகரமாக நடத்திவரும் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைத்து, ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை அமர்த்தி, 64 கோடி வாக்காளர்களை வாக்களிக்கச் செய்யும் இமாலய பணியை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் செய்து முடிக்கிறது. முன்பு வாக்குச் சீட்டுகள் மூலம் தேர்தல் நடந்தபோது ஏற்பட்ட சிரமங்களைத் தவிர்க்க, கடந்த 1982-ம் ஆண்டு முதல் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
இவ்வளவு பெரிய தேர்தல் நடைமுறையை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எளிமைப்படுத்தின. தேர்தல் ஆணையத்தின் அளப்பரிய இப்பணிக்கு எதிராக அரசியல்ரீதியாக சில புகார்கள் அவ்வப்போது எழுந்தாலும், அவை எதுவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. வாக்குப்பதிவில் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிப்பதற்காக வாக்கு பதிவானவுடன் திரையில் நாம் வாக்களித்த கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒளிரவும், அதற்கான ரசீதுபதிவு செய்யப்பட்டு சேகரமாகும் வகையில் 18 லட்சம் ‘VVPAT’ எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவின் தேர்தல் நடைமுறையை உலக நாடுகளே வியந்து பாராட்டி வருகின்றன.