
“பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சபதம் போடுகிறார். “கோடநாடு கொலை வழக்கில் முதல் குற்றவாளி பழனிசாமி தான்; அவரிடம் இருப்பது உண்மையான அதிமுக இல்லை” என்கிறார் புதிதாய் புறப்பட்டிருக்கும் செங்கோட்டையன். “அதிமுக-வை ஒருங்கிணைப்பதே எனது வேலை” என தன்பங்கிற்கு சபதம் செய்திருக்கிறார் ஓபிஎஸ். இவர்களுக்கு மத்தியில், “அதிமுக-வை மீண்டும் ஒன்றுபடுத்துவேன்” என்கிறார் சசிகலா.
இவர்களின் பேச்சு அத்தனையுமே அதிமுக என்ற கட்சியை நோக்கியதாக இல்லாமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் இபிஎஸ்ஸை நோக்கியதாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இபிஎஸ் இல்லாத அதிமுக என்பதுதான் இவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இதற்கு பலமான காரணம் இருக்கிறது.

