திருச்செந்தூர்: பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே இன்று கடல் சுமார் 90 அடி உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர்.
இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களிலும் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. இதேபோல இன்று அதிகாலை 2.35 மணி முதல் நாளை அதிகாலை 3.11 மணி வரை பவுர்ணமி உள்ளது. இதன் காரணமாக கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே இன்று காலை சுமார் 90 அடி தூரம் கடல் உள்வாங்கி பச்சைப் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இருந்தபோதிலும் பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.
The post பவுர்ணமியையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 90 அடி உள்வாங்கிய கடல்: வெளியே தெரிந்த பாசி படர்ந்த பாறைகள் appeared first on Dinakaran.