
வாஷிங்டன்: ‘‘இஸ்ரேலும் இந்தியாவும் சேர்ந்து பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்குவதற்கு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அனுமதிக்கவில்லை. இது மிகவும் அவமானகரமானது’’ என்று அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிஐஏ அதிகாரியாக பணியாற்றியவர் ரிச்சர்ட் பார்லோ. இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 1980-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக அணுஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியத்தை கஹுவா அணுசக்தி மையத்தில் செறிவூட்டும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக சந்தேகம் எழுந்தது. ஆனால், பாகிஸ்தான் கைகளில் அணுஆயுதம் இருப்பதை இஸ்ரேல் உட்பட பல நாடுகள் விரும்பவில்லை.

