பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியில் நான்கு சக்கர வாகனம் கவிழ்ந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பொள்ளாச்சியை அடுத்த மலை கிராமத்தில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வேலைக்காக டோஸ்ட் வாகனத்தில் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மக்கள் வழக்கம் போல வாய்க்கால் வேலைக்கு புறப்பட்டனர். இந்த வாகனத்தை தேவ பாலு என்பவர் ஓட்டினார். அப்போது ஆழியார் அடுத்த சின்னார்பதி மலைப்பாதையில் சென்றபோது அங்குள்ள வளைவில் வாகனம் திரும்பியது.
அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ராணி, திலகராஜ் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியில் நான்கு சக்கர வாகனம் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.