சென்னை: மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த மே 2ம் தேதி மதுரை ஆதீனம் காரில் வந்தார். உளுந்தூர்பேட்டை-சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதுகுறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது.
இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம். தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தனர், தாடி வைத்திருந்தனர் என்று பேசினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை ஆதீனத்தின் முன்ஜாமின் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆதீனத்துக்கு நிபந்தனை ஜாமீன் உத்தரவிட்டது.
The post மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.