சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்க முதலமைச்சர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி அனுமதி கொள்கையின் பத்தாவது ஒஏஎல்பி முறையில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் மொத்த பரப்பளவு 1,91,986.21 சதுர கி.மீ ஆகும். தென் தமிழகத்தின் ஏறக்குறைய 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், தொடர்ச்சியாக இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது.
ஆழ்கடலில்தானே இதைச் செயல்படுத்தப்போகிறார்கள், இதனால் கவலைப்பட வேண்டியதில்லை என அலட்சியமாக இருந்துவிட முடியாது. இதிலும் பல பேராபத்துகள் ஏற்படும். நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி, நீரியல் விரிசல் முறையில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால் கடல் நஞ்சாகும். முதல்கட்டமாக நச்சுத்தன்மை வாய்ந்த மீன்களை மக்கள் சாப்பிட வேண்டிய நிலை உருவாகும். இதனால் பலவிதமான நோய்கள் உருவாகி உடல்நலம் பாதிக்கப்படும். ஒருகட்டத்தில் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துபோய் மீனவர்களின் வாழ்வாதாரம் கைவிட்டுப்போகும். தேவையற்ற வாயுக்களை எரிக்கும்போது காற்று நஞ்சாகும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.
தமிழ்நாட்டின் மக்களையும் கடல்வளங்களையும் பாதுகாக்க 10வது ஏலச்சுற்றில் தென்தமிழ்நாட்டின் கடல்பரப்புகளை ஏலம் விடுவதிலிருந்து ஒன்றிய அரசு உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும். எனவே, தமிழக மக்களைப் பாதுகாக்க, எதிர்கால தலைமுறையைக் காப்பாற்ற இத்திட்டத்தைத் தடுப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்க முதல்வர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.