சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோர், நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடர் அக்டோபர் 19-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. டி20 தொடரின் கடைசி ஆட்டம் நவம்பர் 8-ம் தேதி பிரிஸ்பனில் முடிவடைகிறது.
போட்டிகள் தொடங்க இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் இந்த 8 ஆட்டங்களுக்கும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் சிட்னியில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டி மற்றும் கான்பெராவில் நடைபெறும் முதல் டி20 ஆட்டத்துக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையான மொத்த டிக்கெட்டுகளில் 16 சதவிகிதத்தை இந்திய ரசிகர் மன்றங்கள் வாங்கியுள்ளளன.