புதுடெல்லி: திருமண இணைய தளம் மூலமாக, 25 பெண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் பணம் பறித்த போலி ராணுவ அதிகாரி உத்தரப் பிரதேசத்தில் கைதாகி உள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த இவர், பல அரசு அடையாள அட்டைகளுடன் ஆறு வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார்.
தெலங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள என்டிபிசி காவல் நிலையப் பகுதியில் வசிப்பவர் தயாளி உப்பல். இவர் மணமகள் தேவை என திருமணம் இணையதளத்தில் சுயவிவரங்களை இட்டு ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளார். இதற்காக, கடந்த ஆறு வருடங்களாக தயாளி உப்பல், பல மத்திய அரசின் பல்வேறு போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி உள்ளார். இதில், ராணுவம், தேசியப் புலனாய்வு நிறுவனம், ஜம்மு-காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்தியக் காவல் படையான சிஆர்பிஎப் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.