சென்னை: சாலையில் நடந்து சென்ற சிறுமியை, வளர்ப்பு நாய் கடித்து குதறியது. சென்னை, திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலை பகுதியை சேர்ந்தவர் தர்மன் (45). இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மலேரியா தடுப்பு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய 15 வயது மகள் பாரதி தனது வீட்டருகே உள்ள சாலையில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அச்சமயத்தில், லட்சுமி என்பவர் அவரது வளர்ப்பு நாயை அந்த வழியாக அழைத்து சென்றார். அப்போது, திடீரென அந்த நாய் சிறுமியின் மீது பாய்ந்து, தொடை மற்றும் இடுப்பில் கடித்து குதறியது. இதில், பலத்த காயமடைந்த சிறுமியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.