சென்னை மாநகரில் பெருமழை காலங்களில் வெள்ளநீர் வழிந்தோடும் இயற்கை வடிகாலாக கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. ஆனால் மழைக்காலம் தவிர்த்து, இந்த 3 நீர்வழித்தடங்களிலும் ஆண்டு முழுவதும் கழிவுநீர் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அடையாறு சீரமைப்பு திட்டம், கூவம் சீரமைப்பு திட்டங்களுக்கு பல 100 கோடி ரூபாய்களை அரசு செலவிட்டதால், அவற்றில் ஓடும் கழிவுநீரின் அளவு குறைந்துள்ளது.
ஆனால் சென்னை மாநகரில் சுமார் 55 கிமீ நீளத்துக்கு பயணிக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மற்ற 2 நீர் வழித்தடங்களை விட மோசமாக கழிவுநீர் தேங்கி மாசுபட்டுள்ளது. வட சென்னையில் சென்னை குடிநீர் வாரியமே, வீடுகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தினமும் விட்டு மாசுபடுத்தி வருகிறது. இதனால் இதிலிருந்து உருவாகும் கியூலெக்ஸ், அனாபிலஸ் போன்ற கொசுக்களால் கால்வாயை ஒட்டியுள்ள மக்கள் ஆண்டு முழுவதும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.