புளோரிடா: அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் புறப்பட்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, நேற்று மாலை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். அவர்கள் 2 வாரத்துக்கு அங்கு தங்கியிருந்து 60 ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுடன் இணைந்து வர்த்தக ரீதியான விண்வெளி திட்டத்தை அமெரிக்காவின் அக்ஸியம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 4 வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐஎஸ்எஸ்) அனுப்பி, 2 வார காலம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.