சென்னை: திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், அதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் மற்றும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக இருவழிச் சாலை, 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்நிலையில், அதற்கு தேவையான சவ்வூடு மணல், திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. 5 அடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் சாலை ஒப்பந்த நிறுவனத்தாரால் 12 அடி ஆழத்துக்கும் அதிகமாக சவ்வூடு மணல் நாள்தோறும் வெட்டி எடுக்கப்படுகிறது.