மனிலா: தெற்கு பிலிப்பைன்ஸின் மின்தனோவோவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ‘அழிவுகரமான சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தச் சூழலில், தற்போது பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவுக்கான சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) நீக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இனி சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மின்தனோவோ பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியல் நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதால், அருகிலுள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை மற்றும் விரைவான வெளியேற்ற ஆலோசனை வெளியிடப்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவில் "உயிருக்கு ஆபத்தான அலைகள்" உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிவோல்க்ஸ் நிறுவனம் கூறியது.