மதுரை: சொத்து வரி முறைகேடு புகார் எதிரொலியால், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, திமுக தலைமை அறிவுறுத்தல்படி இன்று (அக்.15) தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயரை தேர்வு செய்யும் மாமன்ற அவசர கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் வரும் 17-ம் தேதி அவசரமாக நடக்கிறது.
மதுரை மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளை கைப்பற்றிய திமுக சார்பில் 8-வது மேயராக இந்திராணி கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது கணவர் பொன் வசந்த், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர். அந்த விசுவாசத்துக்குப் பரிசாக பழனிவேல் தியாகராஜன், 57-வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற பொன் வசந்த் மனைவி இந்திராணியை மேயராக்கினார்.