ஓசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலம் விலகிச் செல்வதால் வாகன ஓட்டிகள் பதற்றமடைந்து மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சென்னை மற்றும் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த பாலம் வழியாகவே செல்கின்றன.
நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் இந்த மேம்பாலம், திடீரென விலகிய நிலைக்கு சென்றதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் ஏற்படுவது இயற்கையே. அதிர்ஷ்டவசமாக விபத்து ஏதும் நடப்பதற்கு முன்பே அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றதால், தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் பாலம் கட்டுமான பாதுகாப்பு நிபுணர்கள் நேரில் சென்று பாலத்தின் கட்டுமானம், விலகிச் செல்வதற்கான காரணம், சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.