மாஸ்கோ : ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அணு ஆயுத பேரழிவிற்கு உலகம் சில மில்லிமீட்டர் தொலைவில் தான் உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக இஸ்ரேலுக்கு ராணுவ உதவி செய்தால், அது மத்திய கிழக்கு பகுதியின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று கூறினார். இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்குவதை ரஷ்யா கடுமையாக எச்சரிப்பதாகவும் இப்போது நடக்கும் மோதல் அணுசக்தி பேரழிவின் விளிம்பில் உலகத்தை கொண்டு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேரழிவிற்கு சில மில்லி மீட்டர் தொலைவில் தான் உலகம் உள்ளதாக எச்சரித்துள்ள அவர், மோதலில் ஈடுபட்டு இருக்கும் இஸ்ரேல், ஈரானுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நட்பு நாடான ஈரான் பிரிக்ஸ் அமைப்பிலும் இணைந்து இருப்பதால் ஒருவேளை அமெரிக்கா நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டால், ரஷ்யா எதிர்க்கும் என்பதால் 3ம் உலக போருக்கு அது வழிவகுக்கும் என ரஷ்யா மறைமுகமாக எச்சரித்துள்ளது. இதே போல் ரஷ்ய அதிபர் புதின் தரப்பில், “ஈரான் – இஸ்ரேல் போரில் அமெரிக்க ராணுவம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். இது ஆபத்தான ஒன்று, எதிர்பாராத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இதற்கு போர் தீர்வாகாது;இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறோம்” என்றார். ஈரானில் இருக்கும் ஒரே அணுமின் நிலையமான புஷேர், ரஷ்யாவால் கட்டிக்கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
The post அணு ஆயுத பேரழிவிற்கு உலகம் சில மி.மீ.தொலைவில் தான் உள்ளது: ஈரானை அமெரிக்கா தாக்க முயற்சிப்பது குறித்து ரஷ்யா எச்சரிக்கை!! appeared first on Dinakaran.