டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கும்படி சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது. நாய் ஆர்வலர்கள், நாய் எதிர்ப்பாளர்கள் என இரு பிரிவாக நாட்டு மக்கள் பிரிந்து சமூக வலைதளங்களில் விவாதங்களை நடத்தி வந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து நாய் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்ற உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, திருத்தப்பட்ட தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘தெருவில் திரியும் நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும்; மீண்டும் தெருக்களில் விடக் கூடாது’ என்ற முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அத்துடன், நாய் ஆர்வலர்கள் தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்க கூடாது, அதற்கென உள்ளாட்சி அமைப்புகளால் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என்ற உத்தரவும் பாராட்டுக்குரியதாகும்.