புதுடெல்லி: அரசு முறை பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். முதலில் சைப்ரஸ் சென்ற அவர், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர், 18ம் தேதி குரோஷியாவுக்கு சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொணடது இதுதான் முதல் முறையாகும். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோரன் மிலனோவிக் மற்றும் பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் ஆகியோரை சந்தித்தார்.
அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, வேளாண்மை, கலாச்சாரம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறும்போது, “இருதரப்பு உறவுகளுக்கு 3 மடங்கு வேகத்தை வழங்க நானும் குரோஷிய பிரதமரும் முடிவு செய்துள்ளோம்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒரு திட்டம் வகுக்கப்படும்’ என்றார். இதையடுத்து, 3 நாடுகள் பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி தாயகம் திரும்பினார் என எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளது.
The post 3 நாடுகள் பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி தாயகம் திரும்பினார் appeared first on Dinakaran.