ஜெனிவா: கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) கனடா புகார் அளித்துள்ளது.
கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற குடியரசு கட்சியின் தலைவர் டொனால்டு ட்ரம்ப், அண்டை நாடான கனடாவை அமெரிக்காவுடன் இணைய அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை நிராகரிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். கனடாவும், மெக்சிகோவும் சட்டவிரோத குடியேற்றத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தடுக்கத் தவறிவிட்டதாகக் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், இவ்விரு நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி 25% அதிகரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதேபோல், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10% உயர்த்திய ட்ரம்ப், பின்னர் அதனை 20% ஆக உயர்த்தினார்.